×

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை!

 

திருவாரூர் அருகே திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சிகா(28). திருநங்கையான இவர் கடந்த 6 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறி சில திருநங்கை தோழிகளுடன் தனி வீட்டில் தங்கி வருகிறார். தற்போது மாங்குடி அக்ரகார தெருவில் 3 திருநங்கை தோழிகளுடன் சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இன்றைய தினம் அவருடைய தோழி ஆண்ட்ரியா என்பவருடன் திருவாரூர் கடைத்தெரு பகுதிகளில் யாசகம் பெற்றுள்ளார். ஆண்ட்ரியா பேருந்து மூலம் தனது சொந்த ஊரான புதுச்சேரி செல்வதாக கூறி சென்ற நிலையில் வின்சிகா மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். புதுச்சேரி செல்வதாக கூறி சென்ற ஆண்ட்ரியா 3 மணி நேரத்திற்கு பிறகு மதியம் ஒன்று முப்பது மணி அளவில் மாங்குடி வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டில் வின்சிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர், வின்சிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் முடிவிலேயே இது கொலையா அல்லது தற்கொலையா என்ற தெரியும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.