நர்சிங் படிக்க ஆசைப்பட்ட மாணவிக்கு நேர்ந்த சோகம்! தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தவமணி. பட்டியலின வகுப்பை சேர்ந்த இவரது மகள் நிஜந்தி, தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த நிஜந்தி, பூச்சிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார்.
அப்பள்ளியில் முதல் குரூப் எடுத்து இருபது நாட்கள் படித்து வந்த நிலையில், நர்சிங் பிரிவில் படிக்க விரும்பியதால் பள்ளிப்படிப்பை தொடர மறுத்து ஒரு மாதம் வீட்டிலேயே இருந்துள்ளார் நிஜந்தி.
இதனை அடுத்து தாயார் தவமணி, தனது மகளை உசிலம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க, மகளுடன் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா, நிஜந்தியின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைமை ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்த தாய் தவமணி, கைகளை கூப்பியவாறு நின்று கொண்டிருந்ததை மகள் நிஜந்தி கவனித்துள்ளார். உடனே, தனது தாயின் கைகளை தட்டி விட்டுள்ளார். இதன் காரணமாக தலைமை ஆசிரியை நிஜந்தியை கண்டித்துள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவியின் நடவடிக்கை குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிஜந்தி மறுநாள் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியை கண்டித்த சம்பவத்துக்கும், மாணவியின் தற்கொலைக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.