நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.. 2 கோடி இலக்கு.. - அமைச்சர் மா.சு தகவல்..
தமிழகத்தில் நாளை சுமார் 1 லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக நிபுனர்கள் எச்சரிக்கின்றனர். இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.. அந்தவகையில் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கிவிடும் படி மத்திய அரசு கூறியிருக்கிறது.
அந்தவகையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்துவது என்பது பொது சுகாதாரத்துறையால் கடந்த ஆண்டு முதலே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். அதேபோல் ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.. மேலும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 2 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸும் போடவேண்டியுள்ளது.
இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள் ஏதுவாக நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. காலை 7 மணிமுதல் இரவு 7 மணி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்தார். மேலும் முகாம் குறித்து பேசிய அவர், நாளை 2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை என்றும், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் பெயர், விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார். அதன் அடிப்படையில், வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நாளை காலை முதல் மாலை வரை ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களை நேரில் பார்வையிட உள்ளதாகவும், இரவு 7 மணிக்கு சென்னை திரும்பியதும் மொத்தம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விபரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த முறை கிராமங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செயல்படும் என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் வந்து ஊசி போட்டுக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பதாக கூறினார்.