×

ரூ.42.45 கோடியில் தொல்காப்பிய பூங்கா- முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்

 

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) சார்பில்  42.45 ரூபாய் செலவில்  மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 42.45 கோடி ரூபாய் செலவில்  நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாய் கலைஞரால் 2008ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, ‘தொல்காப்பியப் பூங்கா’ உருவாக்கப்பட்டு 2011 கலைஞரால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு சிறப்பான முறையில் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றது.



கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்காவினை பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஜூலை 2021ம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையினால் ‘தொல்காப்பியப் பூங்கா மறுமேம்பாட்டு’ பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிருவாக அனுமதி வழங்கப்பட்டது. தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை,  திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) அமைக்கப்பட்டுள்ளது மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் (Triple Cell Box Culvert) அமைக்கப்பட்டுள்ளது.