இன்று அனுமன் ஜெயந்தி 2025..! பூஜிக்கும் முறை விரத முறைகள் இதோ!
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனைத் வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும். அனுமன் ஜெயந்தி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தமிழ் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 05.57 மணிக்கு துவங்கி, டிசம்பர் 20 ம் தேதி காலை 07.54 வரை அமாவாசை திதி உள்ளது. ஆனால் டிசம்பர் 20ம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு தான் மூலம் நட்சத்திரம் துவங்குகிறது. இதனால் திதியை அடிப்படையாக வைத்து அனுமன் ஜெயந்தியை கொண்டாடுபவர்கள் டிசம்பர் 19ம் தேதியன்றும், நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடுபவர்கள் டிசம்பர் 20ம் தேதி அன்றும் அனுமன் ஜெயந்தியை கொண்டாடலாம்.
இந்த நாளில் அனுமனுக்கு செந்தூரம் சாற்றி, அனுமன் மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சி மற்றும் தொடர் வெற்றிகளை பெற முடியும். இந்த நாளில் ஸ்ரீராம ஜெயம் சொல்லுவதும், எழுதுவதும் சிறப்பான பலன்களை தரும்.
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு துளசி மாலை, வடை மாலை, வெண்ணெய் காப்பு ஆகியவற்றை சாத்தி வழிபடலாம். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அனுமன் நம்முடைய துன்பங்களை போக்கி, வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. அதே போல் இந்த நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டே இருக்கும்.
அனுமனை பூஜிக்கும் முறை:
ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
சில பக்தர்கள் வீட்டிலேயே அனுமனுக்கு பூஜை செய்து பிராத்தனைகளை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, அனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை ஆகியவற்றை படைப்பார்கள். அதோடு அனுமனை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்றவற்றை பாடினால் சிறப்பு.
மேலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடைகள் நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.