×

முழு ஊரடங்கு நாளில் முன்பதிவு... காசு திருப்பி வருமா? - போக்குவரத்து துறை விளக்கம்!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டு வருகின்றன. 16 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் செயல்படவுள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக 16, 17,18 ஆகிய தினங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இச்சூழலில் வரும் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசுப் பேருந்துகள் வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவது இயங்காது. 

ஆனால் நிறைய பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குரிய கட்டணம் திருப்பி அளிக்கப்படுமா படாத என சந்தேகம் எழுந்தது. அதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள், ''ஜனவரி 16ஆம் தேதி அன்று மட்டும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக வழக்கமான பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 4,130 பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சுமார் 20 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். 

குறிப்பாக, மதுரை மண்டலம், கோவை மண்டலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் அதிக அளவு முன்பதிவு செய்திருந்தனர். தற்போது அவர்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், வரும் 16ஆம் தேதி முழு ஊரடங்கு நாளன்று அரசுப் பேருந்துகள் இயங்காது என்பதால் அன்றைய தினம் முன்பதிவு செய்தவர்களுக்குக் இரண்டே நாட்களில் கட்டணம் திருப்பித் தரப்படும். இல்லையெனில் ஜனவரி 16ஆம் தேதிக்குப் பதில் வேறொரு நாளில் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளலாம்'' என்றனர்.