×

10 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த கடன்; தவிக்கும் அரசு போக்குவரத்து கழகம் - ஆர்டிஐயில் அம்பலம்!

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்படும் தகவல்கள் எப்போதுமே அதிர்வலைகளையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். சமீபத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நஷ்டத்தில் ஓடியதாக தகவல் வெளியானது. திமுக மற்றும் அதிமுக அரசை திட்ட வேண்டுமென்றால் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சுட்டிக்காட்டி தான் விமர்சிப்பார்கள். ஆனால் அதிலேயே நஷ்டம் என்றாம் நம்ப முடிகிறதா? ஆர்டிஐ மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. 

இதுவே இப்படியென்றால் அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான கடனில் முழ்கியுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. அதன் மூலம் பெறப்பட்ட தகவலில், "சேலம் போக்குவரத்து கழகத்தில் 2011ஆம் ஆண்டு ரூ.221 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 11 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது இதன் கடன் தொகை சுமார் ரூ.2172 கோடியாக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் பத்தாண்டுகளில் 10 மடங்கு அதிகரித்து, ரூ.2247 கோடியாக உள்ளது. மதுரை போக்குவரத்து கழகத்தில் 8 மடங்கு அதிகரித்து, ரூ.2178 கோடியாக இருக்கிறது. கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 7 மடங்கு உயர்ந்து  ரூ.2478 கோடி கடனில் மூழ்கியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கடன் தொகை சுமார் ரூ.2695 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 4 மடங்கு அதிகரித்து, ரூ.1555 கோடியாக அதிகரித்துள்ளது.