×

மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி விரைவில் - தமிழ்நாடு அரசு தகவல்!

 

திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என அவர் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் சோழிங்கநல்லுார், திருநீர்மலை, திருச்செங்கோடு, மலைக்கோட்டை, திருத்தணி ஆகிய மலைக்கோவில்களுக்கு ரோப்கார் வசதி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக கோயில்களில் ஆய்வு முடித்த பின், உலகத்தரத்தில் நவீன வசதியுடன் ரோப்கார் அமைக்க டெண்டர் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சோளிங்கா் நரசிம்ம சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில்களில் ரோப் காா் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் நிலுவையில் இருக்கிறது. 

33 மலைக்கோயில்களில் கேபிள் ரோப் காா் வசதி ஏற்படுத்துவது, இயக்குவதற்கான நிதி நிலைத்தன்மை, பாதுகாப்பு தணிக்கை அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, தொழில்நுட்ப சாத்தியக்கூறு தொடா்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத் துறை, பொதுப் பணித்துறை, வருவாய் துறை, உள்துறை உள்ளிட்ட அரசுத் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "பழனியில் ஒரு இடத்தில் தற்போது கேபிள் ரோப் காா் இயக்கப்பட்டு வருகிறது. சோளிங்கர், அய்யர்மலை கோயில்களில் கேபிள் ரோப் காா் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஐந்து இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கேபிள் ரோப் காா் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றாா்.