×

ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும் :  தமிழக அரசு அறிவுறுத்தல்

 

அண்மைக்காலமாக  இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் தீவிரமடைந்திருக்கிறது..  தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸும்  தன் பங்கிற்கு உலுக்கி எடுத்து வருகிறது..  இந்த வைரஸ்களின் பரவல் எதிரொலி காரணமாக  நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே டெல்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா , தெலங்கானா ஆகிய மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு  தடை போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்று தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி,  தமிழகத்தில் நாளை முதல்  இரவு நேர  ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதேபோல் ஜன.9 முதல்  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..  இதனைத் தொடர்ந்து ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு அந்நிறுவனங்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. .  

மேலும், இரவு நேர ஊரடங்கின் போதும் தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கின் போது பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை  மற்றும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும்  கூறப்பட்டுள்ளது.