தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவும் பிரிட்டன் கொரோனா!
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடியே 99 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 17லட்சத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,019 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 13 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 9,039 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 64,075 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 60 ஆயிரத்து 244 ஆகஅதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 622 பேர் ஆண்கள், 397 பேர் பெண்கள். தமிழகத்தில் 235 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று மட்டும் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,059 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,098 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 92ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் பிரிட்டன் கொரோனா தொற்றுடன் தொடர்புடையவர்கள் 10 பேர். சென்னையை சேர்ந்தவர்கள்-4, தஞ்சை 3, நீலகிரி- 1, மதுரை- 1 மற்றும் தேனியில் ஒருவர் ஆவார்.