×

மீண்டும் தலைதூக்கும் கொரோனா- 27 வயது இளைஞர் பலி

 

நீண்ட நாட்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் 10 பேருகும், செங்கபட்டில் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 3 பேருக்கும், நீலகிரியில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் என நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.