×

சிவில் சர்வீஸ் தேர்வு... பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவு தேர்வு ஒத்திவைப்பு!

 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம் பெற்றுள்ளது. இதனால் ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள், பள்ளி, கல்லூரிகள் மூடல் என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால் முக்கிய தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு மையத்தின் கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவு தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலைபட்டதாரிகள் ஆகியோருக்கு, மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு ஜூன் 2022 ஆம் ஆண்டிற்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கு நுழைவுத்தேர்வு 23.01.2022 அன்று நடைபெறவிருந்தது.

அதன்படி இணையதளம் மூலமாக 8704 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. கொரோனா காரணமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. ஆகவே பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com மற்றும் தொலைபேசி 044-24621475 வாயிலாக ஆர்வலர்கள் அறிந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.