×

திருவொற்றியூர் கடல் அலையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

 

திருவொற்றியூர் கடலில் குளித்த மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் சதானந்தபுரத்தை சேர்ந்தவர் சந்துரு 18.  கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவரான ஹரிஷ் உட்பட ஏழு பேருடன் கடந்த 16ஆம் தேதி கடலில் குளிக்க சென்றுள்ளார். திருச்சினாங்குப்பம் கடற்கரையில் குளித்த போது திடீரென ராட்சத அலையில் சந்துரு, ஸ்ரீகாந்த், ஹரிஷ் மூவரும் சிக்கியுள்ளனர். அவர்களின் அலறல்  சத்தம் கேட்டு நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஹரிஷ்,  ஸ்ரீகாந்த் ஆகியோர் மீட்கப்பட்டு ஸ்டான்லி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . இருப்பினும் மருத்துவர்கள் பரிசோதனையில் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.  அத்துடன் சந்துரு கடல் அலையில் சிக்கி மாயமானார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் கடலில் குளிக்க சென்று அலையில் சிக்கிய மூவரும் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஹரிஷ்,  ஸ்ரீகாந்த்  பலியான நிலையில் கடலில் மாயமான சந்துரு உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும், அப்பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.