×

ஜெயலலிதா – சசிகலா நட்பு தொடங்கியது இப்படித்தான்! #TTN_Flashback

கடந்த ஒரு மாதத்தில் தமிழக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் எதுவென்று தேடினால் நிச்சயம் சசிகலா என்பது தான் இருக்கும். ஏனெனில் ஜனவரி மாத இறுதியில் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று தொடக்கத்தில் பேசப்பட்டது. பின் ஜனவரி 27 அன்று சசிகலா விடுதலை ஆகிறார் என்பது உறுதியாக என்று செய்யப்பட்டது என அவரின் வழக்கறிஞர் கொடுத்த தகவலின்படி விவாதிக்கப்பட்டது. ஜனவரி 27 ஆம் தேதி வரை இது குறித்து பேச்சுக்களே இருக்கும் என்று நினைத்திருந்த
 

கடந்த ஒரு மாதத்தில் தமிழக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் எதுவென்று தேடினால் நிச்சயம் சசிகலா என்பது தான் இருக்கும்.

ஏனெனில் ஜனவரி மாத இறுதியில் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று தொடக்கத்தில் பேசப்பட்டது. பின் ஜனவரி 27 அன்று சசிகலா விடுதலை ஆகிறார் என்பது உறுதியாக என்று செய்யப்பட்டது என அவரின் வழக்கறிஞர் கொடுத்த தகவலின்படி விவாதிக்கப்பட்டது.

ஜனவரி 27 ஆம் தேதி வரை இது குறித்து பேச்சுக்களே இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில், நேற்று திடீரென்று சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். தற்போது அங்கு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சசிகலா பற்றி இவ்வளவு செய்திகள்… இவ்வளவு பேச்சுக்கள் வர என்ன காரணம்? சசிகலா அரசியல் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் அல்ல. சசிகலா ஏதேனும் ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக முன்னேறியவரும் அல்ல… பிறகு எப்படி இவ்வளவு அரசியல் பின்புலம் அவருக்கு கிடைத்தது? அதற்கு ஒரே நபர் தான் காரணம்… அவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா திரைப்படங்களில் நடிப்பது குறைந்து எம்ஜிஆரின் ஆலோசனைப்படி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழ்நாடு எங்கும் வலம் வந்த காலம் அது. 1984 ஆம் ஆண்டில் சசிகலா வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விடுவது, வீடியோக்கள் பதிவு செய்வது போன்ற ஒரு கடையை நடத்தி வந்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்த ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவோடு பழக்கம் ஏற்பட்டது சசிகலாவுக்கு. அவர் வழியாக ஜெயலலிதாவுக்கு அறிமுகம் ஆனார் சசிகலா.

ஜெயலலிதாவுக்கு பழைய படங்களைப் பார்ப்பது என்பது விருப்பமான பொழுதுபோக்கு. ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்டுகளை கொண்டு கொடுக்கும் வேலையை சசிகலா செய்துகொண்டிருந்தார். அப்படியே இருவரின் நட்பும் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோவாக பதிவு செய்யவும் வாய்ப்பும் சசிகலாவுக்குக் கிடைத்தது.

அந்த நேரத்தில் எம்ஜிஆர் மரணமடைந்தார். எம்ஜிஆர் மரண ஊர்வலத்தில் ஜெயலலிதா நடத்தப்பட்ட விதத்தில் மிக ஆறுதலாக இருந்தவர்கள். சசிகலா மற்றும் நடராஜன். அப்போது சசிகலாவோடு நட்பு மேலும் நெருங்கியது. ஒரு கட்டத்தில் போயஸ் கார்டன் வீட்டில் தன்னோடு சசிகலாவை வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேறியது.

அதன்பின் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் சசிகலாவின் பங்களிப்பு பெருமளவு இருந்ததை பலரும் அறிவார்கள். ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் பொனபோது, அவரைக் கவனித்துக்கொண்டவர் சசிகலா. இறுதி சடங்கு வரை நடத்தியவரும் சசிகலாவே.

இறுதியாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தீர்ப்பு வரும்போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. அதனால் மற்ற மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அந்தத் தண்டனை முடிவடையும் நாள்தான் ஜனவரி 27, 2021. விடுதலைக்கு இன்னும் சில நாட்களே இருக்கையில் சசிகலாவின் உடல்நல குறைவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.