திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- அரசு புறந்தள்ள வேண்டும்: வன்னி அரசு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத சக்திகளின் கோரிக்கைகளை அரசு புறந்தள்ள வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், “'பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன சூழ்நிலை நிலவியதோ அது தொடர வேண்டும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள். இது தான் அரசின் கொள்கை. இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. எந்த மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்வதற்கு நூறு சதவீதம் அனுமதிக்க மாட்டோம்' திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் நேற்று (07.06.26) மதுரை செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ' என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு கடந்த ஜூன் 4ஆம் தேதி கேள்வி எழுப்பி உள்ளது.மக்கள் தொகையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள பிறப்படுத்தப்பட்ட இந்து மக்களின் சமூக - கல்வி - பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்தி அவர்களின் வாழ்வாதார போராட்டங்களிலும், அவர்களுக்கு மறுக்கப்படும் சமூகநீதியை உறுதி செய்வதிலும் எந்தக் காலத்திலும் அக்கறை காட்டாத பாஜக - சங்க பரிவார் அமைப்புகள், தங்கள் மதவாத அரசியலுக்கு மட்டும் ' இந்து ' என்ற பெயரில் அவர்களை அணிதிரட்ட முயன்று வருகின்றனர். சனாதனிகளின் இந்த சதியை - ஏமாற்று வேலையை நன்கு அறிந்த திருப்பரங்குன்றம் மக்கள், இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாறாக பாஜகவின் குரலாக பேசிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தலில் தக்க பதிலடி தந்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடித்துவிட்டோம் என்று வட இந்தியாவில் பெரும் மதவாத அரசியலை முன்னெடுத்த பாஜகவை, அதே அயோத்தி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் படுதோல்வி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அங்கு சமாஜ்வாதி கட்சியின் முன்னணி தலித் தலைவர்களில் ஒருவரான திரு. அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். இத்தகைய பதிலை தான் தமிழ்நாட்டில் மதவாத பிளவுவாத அரசியலை முன்னெடுத்த பாஜக அணிக்கு மக்கள் கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களால் புறந்தள்ளபட்ட 'Fringe Elements'-ஐ நமது தமிழ்நாடு அரசும் அவ்வாறே அணுக வேண்டும். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் நடைமுறையை தொடருவதற்கான சட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். மதவாத சக்திகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.