×

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நிறைவு - தீர்ப்பு தள்ளிவைப்பு!

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றுறு 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நேற்று நிறைவு பெற்றது. தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை இன்றைக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.