×

ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் - திருமாவளவன்

 

ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஐக்கிய நாடுகளின் பொது மன்றம் வெள்ளிக்கிழமையன்று நிறைவேற்றிய தீர்மானத்தில், ’இஸ்ரேலியப் படைகளுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே "உடனடியான, நீடித்த மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இஸ்ரேல் தரைப்படை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் கூறுவதால், காஸாவில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகளை "தொடர்ச்சியாகவும், போதுமான அளவிலும்,  தடையின்றியும்" வழங்க வேண்டும் என்றும் ஐநா தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

ஒருபுறம் பாலஸ்தீனத்தை ஆதரித்துக்கொண்டு இன்னொருபுறம் இஸ்ரேல் தொடுத்துள்ள போரையும் மறைமுகமாக ஆதரிப்பது இந்தியாவின் நன்மதிப்பை உலக அரங்கில் கெடுப்பதாக உள்ளது. இது இந்திய அரசின்மீது களங்கத்தை ஏற்படுத்தும் கறையாகப் படிந்துள்ளது. காஸா மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இப்போதாவது இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் குரலெழுப்ப வேண்டும். ‘ஐ.நா. பொதுமன்றத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்துப் போர் நிறுத்தம் செய்யவேண்டும்’ என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.