மதங்களுக்கிடையே வெறுப்பை விதைக்கும் திருமாவளவன் – பாஜக கடும் கண்டனம்
டெல்லியில் 21வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி கடந்த ஆகஸ்டு 27ஆம் தேதியன்று ஒரு கும்பலால் கடத்தப்பட்டதாக செல்லப்பட்டது. போலீசாரின் தேடுதலில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் . பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், அவரது உடலில் 50 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமை போன்ற ஒரு நிகழ்வு என்று மக்கள் கொந்தளித்தனர். இந்தப் பெண் காவல்துறை அதிகாரி கொலை வழக்கில் நிஜாமுதீன் என்பவர் சரணடைந்தார். அவர் அந்த பெண் காவல் அதிகாரியின் கணவர் என்று விசாரணையில் கூறியிருக்கிறார்.
தங்களின் திருமணத்தை பெண்ணின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் தனியாக வசித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் இதை மறுத்துள்ளனர். மேலும் கொலை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கின்றனர். நான்கு நண்பர்களுடன் நிஜாமுதீன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, காவல் அதிகாரியாகப் பணியாற்றிய இஸ்லாமிய இளம்பெண் படுகொலை. 50க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள். பலர் கூட்டுசேர்ந்து வன்புணர்வு மற்றும் குரூர சித்திரவதை. நிர்பயா சட்டம் இருந்தும் பெண்களுக்கு, அதுவும் காவல்துறை பெண்ணுக்கே பாதுகாப்பில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
திருமாவளவனின் இந்த கருத்துக்கு, தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘’இஸ்லாமிய பெண் என்று மதத்தை குறிப்பிடுவது உங்கள் உள்நோக்கத்தை வெளிப் படுத்துகிறது. கொலை செய்ததாக சரணடைந்திருப்பது நிஜாமுதீன் என்ற ‘இஸ்லாமியர்’ என்று சொல்ல மறந்தீர்களா? மறைத்தீர்களா? மதங்களுக்கிடையே வெறுப்பை விதைக்கும் செயலே உங்களுடைய அறிக்கை’’தெரிவித்திருக்கிறார்.