விஜய் தனித்து நிற்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை - தமிழிசை செளந்தர்ராஜன்..!
வாரம் இருமுறை வெளியாகும் இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) என்.டி.ஏ கூட்டணிக்கு வராதது குறித்துப் பேசியுள்ளார். அவர், "விஜய் எங்கள் கூட்டணிக்கு வராவிட்டாலும் கூட என்.டி.ஏ கூட்டணி தான் வெற்றிபெறும்," என்று உறுதியாகக் கூறினார். மேலும், புதுச்சேரியை என்.ஆர்.காங்கிரஸ் பார்த்துக்கொள்வதாகவும், "எங்களைக் கேட்டால், 'தமிழ்நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சினிமாவில் வேலை இருந்தால் விஜய் அங்கே போகட்டும்...' என்பேன்," என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் வரட்டும், இல்லையென்றால் விஜய் சினிமாவுக்கே போகட்டும். மற்றபடி, விஜய் தனித்து நிற்பதால், எந்தப் பிரயோஜனமும் இல்லை!" என்று கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரு பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால், கூடுதலாகக் கட்சிகள் வந்தால் பலமே தவிர, மற்ற கட்சிகள் சேராமல் போனாலும் தங்கள் கூட்டணி பலவீனமடையாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைந்தாலும் கூட, இந்த இரு பெரும் கட்சிகளைத் தாண்டி அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியுமா என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், "புதுச்சேரி பிரசாரத்திலிருந்து அவர் குழம்பிப்போயிருக்கிறார் என்பது தெரிகிறது," என்றும் தனது கருத்தை முடித்துக்கொண்டார்.