11 முகங்கள், 22 கைகள்! - தமிழகத்தில் எங்கும் காண முடியாத முருகனின் அதிசய ஸ்தலம் எங்கு இருக்கு தெரியுமா..?
ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை என்னும் இடத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் அதிசய கோலமாக முருகப் பெருமான் 11 முகங்கள், 22 கைகளுடன் காட்சி தருகிறார். இது போன்ற திருக்கோலத்தை வேறு எங்கும் காண முடியாது. இது முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் என்று சொல்லப்படுகிறது.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகப் பெருமான் இந்த தலத்திற்கு வந்ததாக தல புராணம் சொல்கிறது. முருகன் இங்கு வந்த சமயத்தில் அவருக்கு 11 முகங்கள், 22 கரங்கள் இருந்ததாகவும், அதே விஸ்வரூப கோலத்தில் முருகன் இங்கு காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது. மற்ற தலங்களில் பிரணவ மந்திரம் உரைப்பதற்காக சிவபெருமானின் மடியில் குழந்தையாக அமர்ந்த கோலத்தில் தான் முருகப் பெருமான் காட்சி தருவார்கள்.
ஆனால் இந்த தலத்தில் மட்டுமே தகப்பன் சுவாமியான முருகப் பெருமான் குன்றின் மீது அமர்ந்த பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்வது போலவும், அதை நின்ற கோலத்தில் இருந்து சிவ பெருமான் கேட்பது போலவும் காட்சி தருகின்றனர். இது மிகவும் சிறப்பான அம்சமாகும்.
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி என்பவர், குண்டுக்கரை முருகன் கோயிலுக்க தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமி மலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் ஊருக்கும் அவருக்கும் நன்மை நடக்கும் என கூறி உள்ளார்.
முருகன் கனவில் வந்து கூறிய படியே பாஸ்கர சேதுபதியும், குண்டுக்கரை சென்று அந்த கோயிலில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு, புதிதாக 11 திருமுகங்கள், 22 திருக்கரங்களுடன் இருக்கும் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலை முருகன் பெயரான சுவாமிநாதன் என்ற பெயரை சூட்டி உள்ளார்.