×

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபர்!

 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியியல் தொல்லை  செய்த வாலிபர் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் புகழ்பெற்ற புனித தலமான மஹான் சுல்தான் பாதுஷா நாயகம் அடக்கஸ்தலம் உள்ளது. இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான யாத்திரையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும் மனநலம் பாதிக்கப்படுபவர்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று நலமாகி இங்கேயே தங்கிவிடுகின்றனர். 

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மொட்டை செய்யது என்ற சேக் உதுமான் என்ற வாலிபர் ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள தோட்டத்தில் மனநல சிகிச்சை பெற்று  வந்த 19வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்ததாக அவரது சித்தி கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த  கீழக்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர். அவரை  கைது செய்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவனுக்கு சி.டி ஸ்கேன் எடுத்துவிட்டு வந்தபோது சிறுநீர் கழிக்க வேண்டும்  என அழைத்துச் சென்ற போலீசாரிடம் கூறியுள்ளான். இதையடுத்து அருகில் இருந்து கழிப்பறைக்கு அழைத்து சென்றுள்ளனர். உள்ளே சென்ற அவன் தண்ணீர் குழாயை திறந்துவிட்டு பாத்ரூமில் கிராதி கம்பியை வளைத்துவிட்டு தப்பிசென்றுவிட்டான். இதையடுத்து தப்பிசென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.