×

பேராசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாடியில் இருந்து குதித்த மாணவன்

 

கோவை வேலந்தாவளம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் கண்டித்ததால் மாணவர் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அம்ஜத் அகமது (19). இவர் கோவை அருகே கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடந்தது. அப்போது மாணவர் தேர்வு எழுதும் போது காப்பியடித்ததாக தெரிகிறது. இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர். மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என எச்சரித்தனர். 

இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. 

இந்த தகவல் அறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனிடையே கல்லூரி மாணவரை பெற்றோரை அழைத்துவரக் கட்டாயபடுத்தி மிரட்டிய சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.