சுய உதவிக் குழு பெண்களை மிரட்டும் வங்கிகள் மீது குற்ற வழக்குப் பதிய வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
கொரேனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுய உதவிக் குழு பெண்களைப் பணம் கேட்டு அவதூறாக பேசி மிரட்டும் வங்கிகள், வங்கிப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான தவணைத் தொகையை செலுத்தும்படி தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மிரட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இந்த மனிதநேயமற்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவையாகும்.
இந்த சூழலை புரிந்து கொள்ள முடியாத தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் பெற்ற கடனுக்கான தவணையை உடனடியாக திருப்பிச் செலுத்தும்படி மிரட்டல் விடுப்பதாக தெரிகிறது. சில இடங்களில் பொதுத்துறை வங்கிகளும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கின்றன. சில இடங்களில் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முகவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை கண்ணியக் குறைவாக நடத்துவதாக செய்திகள் வெளிவருவது மிகவும் வேதனை அளிக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் யாரையும் விட்டு வைக்கவில்லை. மிகப்பெரிய அளவிலான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே தொழில் செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பதையும், அவற்றுக்கு புத்துயிரூட்ட கடன், மானியம் உள்ளிட்ட உதவிகளை வங்கிகள் வழங்கி வருவதையும் அறிய முடிகிறது. பெரு நிறுவனங்களின் நிலைமையே அவ்வாறு இருக்கும் போது, கிராமப்புற பொருளாதாரத்தை நம்பியிருக்கும் மகளிரின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உணர முடியும். ஆனால், அதை வங்கிகள் உணராதது தான் வேதனை அளிக்கிறது.
எனவே, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தவணை வசூலை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், தனியார்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கடன் தவணை ஒத்திவைப்புக்காலத்தில் தவணைத் தொகை மீதான வட்டியையும் ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கிராமப்புறங்களில் தவணை செலுத்தும்படி மிரட்டுவோர் மீது குற்றவழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அரசு ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.