போதையில் பச்சை பச்சையாக பேசி சென்னை இளம்பெண் ரகளை - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!
சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் நேற்றிரவு (வியாழக்கிழமை) சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். உணவகத்தில் இருந்தபோதும், சாலையில் நடந்து சென்றபோதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களைப் பார்த்து அந்த பெண் திடீரென ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தனது காலால் எட்டி உதைத்தார்.
பெண்ணின் இந்த அநாகரிகமான செயலால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த ஒருவர் அந்த பெண்ணின் தலையில் பலமுறை அடித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த மோதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் வழங்கி அந்த பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.