குட் நியூஸ் சொன்ன பிரதமர்..! 3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்..!
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விநியோகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நமது நாடு 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நகர்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதுபோன்ற வேலைவாய்ப்பு மேளாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக பங்களித்து வருகின்றனர்.
தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அங்கீகரித்துள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு பட்ஜெட்டில் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
இன்று இந்தியா 2 வரம்பற்ற சக்திகளைக் கொண்டுள்ளது என்பதை உலகம் ஒப்புக்கொள்கிறது. ஒன்று, நமது மக்கள்தொகை. இரண்டாவது நமது ஜனநாயகம். இளைஞர்களின் பலம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கான மிகப் பெரிய சொத்து; மிகப் பெரிய உத்தரவாதம். இந்த சொத்தை செழிப்புக்கான சூத்திரமாக மாற்றுவதில் எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடுகிறது ” என தெரிவித்தார்.