×

அதிமுகவில் அடுத்த பிளவு? கொடி, பேனர் இன்றி கோவையில் எஸ்.பி.வேலுமணி நடத்திய ரகசிய ஆலோசனை!

 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

வழக்கமான அரசியல் கூட்டங்களைப் போலன்றி, இதில் அதிமுகவின் கட்சி கொடியோ அல்லது பேனர்களோ எதுவும் பயன்படுத்தப்படவில்லை. மேடையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரின் புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

தேர்தலுக்குப் பின் நடந்தது என்ன? - வேலுமணி விளக்கம்:

ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சென்னையில் கடந்த 25 நாட்களாகத் தலைமைப் பொறுப்பில் என்னென்ன நகர்வுகள் நடந்தன என்பது குறித்து விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உங்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் எப்போதும் நான்தான் முன்னால் வந்து நிற்பேன். இந்தச் சட்டப்பேரவை தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் நம்முடன் இருந்திருந்தால் கட்சி இன்னும் பலமாக இருந்திருக்கும்" என்று குறிப்பிட்டார்.

திமுக விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுத்த சில முடிவுகள் குறித்து தனது கடுமையான அதிருப்தியை வேலுமணி வெளிப்படுத்தினார். "திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் கட்சியில் பிரச்சினை உருவானது. எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்ததே திமுகவை எதிர்ப்பதற்குத்தான். அப்படி இருக்கும்போது, திமுகவுடன் அதிமுகவை சேர்ப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

திமுகவுடன் யார் கைகோர்த்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். கட்சியைச் சேர்ந்த 30 மாவட்ட செயலாளர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்களின் கருத்து என்னவோ, அதுதான் என் கருத்தும்" என்றார்.

நானும் வெளியேறுவேன் என நினைக்கிறார்கள்:

மேலும் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசியவர், “கடந்த 21 வருடங்களாக மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறேன். தேவையெனில் கட்சியில் சாதாரண உறுப்பினராகக் கூட இருக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னை நம்பி வந்தவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். தவறு நடந்தால் அதைத் தட்டிக்கேட்போம்.

தற்போது வாட்ஸ்அப்பில் குழுக்களை உருவாக்கி பலர் என்னை அவதூறாகப் பேசி வருகின்றனர். அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜே.சி.டி.பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறியது போல, நானும் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என ஆவேசமாகப் பேசினார்.

செய்தியாளர்களிடம் மழுப்பல்: ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,  ‘‘நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இது மீட்டிங்கே கிடையாது. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்னோம். அவ்வளவுதான்’’என்றார்.