தமிழக சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விலைவாசி உயர்வு பிரச்சனை! உதயநிதி - எடப்பாடி பழனிசாமி காரசார உரை!
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு பிரச்சினைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.தொடர்ந்து கருணாநிதி ஆட்சியில் விலைவாசி பிரச்சினை எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் அவையில் எடுத்துரைத்தார்.
ரேஷன் கடைகளில் சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களை தற்போது வழங்கப்படும் அளவைவிட கூடுதலான அளவில் வழங்கிட அரசு ஆவண செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் துறையின் அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதுகுறித்து பேசினார். அவர், “தமிழ்நாட்டில் நிலவும் வறட்சியின் காரணமாக அரிசியின் வரத்து குறைந்து விட்டது. அதிமுக ஆட்சியில் எந்தெந்த உணவுப் பொருள்களின் விலைகள் ஏறுகிறதோ அவற்றை மற்ற உற்பத்தி மாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்காக விலை கட்டுப்பாட்டு நிதி என்ற பெயரில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அந்த நிதியை விலைவாசி உயர்வின்போது பயன்படுத்தி விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருந்தோம். அதுபோன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.