×

வேட்டையை தொடங்கியது ‘சிங்கப்பெண்’ படை! சென்னையில் வீடு புகுந்து அத்துமீறிய காம கொடூரன் விரட்டி பிடிப்பு!

 

சென்னை அயனாவரம் பகுதியில் வசிக்கும் 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் மதியம் ஒரு மணியளவில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது கணவரும் மகள்களும் வெளியே சென்றிருந்ததை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற நபர், அமுக்க முடியாத மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். யாரும் இல்லாத தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சுரேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதால், நிலைகுலைந்த அப்பெண் அதிர்ச்சியில் மரணக் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்தப் போதை ஆசாமி, தப்பிப்பதற்காகப் பெண்ணைக் கட்டிலில் பலமாகத் தள்ளிவிட்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பொதுமக்கள் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த அடுத்த கணமே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, பெண் காவலர்கள் சங்கீதா மற்றும் தீபிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் விரைந்து சென்றனர். தப்பி ஓடித் தலைமறைவாக முயன்ற காமக் கொடூரன் சுரேஷை நாலாபுறமும் தேடிக் கண்டுபிடித்து மடக்கிப் பிடித்த பெண் போலீஸார், அவனை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதனையடுத்து மகளிர் போலீஸார் சுரேஷை முறைப்படி கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகத்தில் முறைப்படி அமைக்கப்பட்ட பிறகு, அவர்களது துரித நடவடிக்கையால் பதிவு செய்யப்பட்ட முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.