தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்த அரசு! முதியோருக்கு இலவச காப்பீடு, 20 லட்சம் பேருக்கு பட்டா... முழு பட்டியல் இதோ!
சட்டசபையில் வருவாய், பேரிடர் மேலாண்மை, மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர், தங்கள் துறைகளில் புதிய திட்டங்களை அறிவித்தனர். அவற்றின் விபரம்:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை :
* வருவாய் துறை வாயிலாக, விரைவாக சான்றிதழ்கள் கிடைக்க, தற்போதுள்ள நான்கு படி நிலைக்கு பதிலாக, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் அல்லது தாசில்தார் என, மூன்று நிலையாக மாற்றப்படும்
* விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயன் பெறும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப் பட்ட நில வரி வசூல், 1436 பசலி ஆண்டு முதல் ரத்து செய்யப்படும்
* கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்
* கிராம நத்தம் காலி மனைகளில், வீடு கட்டி வசித்து வரும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்க, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
* கணினி மயமாக்கலில், நத்தம் நிலப்பதிவேடுகளில் ஏற்பட்ட பிழைகளை திருத்த, சிறப்பு முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும்
* நில அளவை பணிகளை விரைந்து மேற்கொள்ள, களப்பணியாளர்களுக்கு 136.68 கோடி ரூபாயில் நவீன கருவிகள் வழங்கப்படும்
* நில அளவை, பட்டா வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள, 1,500 பேருக்கு நில அளவை பயிற்சி அளிக்கப்பட்டு உரிமம் வழங்கப்படும்.
புயல் பாதுகாப்பு மையம் :
* வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது, தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்
* பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், 25 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* கிராம நிர்வாக அலுவலக பராமரிப்புக்காக மாதம், 1,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 12,000 ரூபாய் வழங்கப்படும்
* தொழில், வணிக நிறுவனங்கள், கல்வி, மருத்துவ நோக்கங்களுக்கான அறக்கட்டளைகள் வசம் உள்ள நிலங்களுக்கு, அரசின் அனுமதி கிடைப்பதற்காக, நில உச்சவரம்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்
* ஒருங்கிணைந்த பேரிடர் மற்றும் நிகழ்நேர தகவல் சேகரிப்பு அமைப்பு, 80 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* தமிழக பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில், சிறப்பு திறன் மையம் உருவாக்கப்படும்
* பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை பணிக்கு தொழில்நுட்ப அமைப்பு, 16.53 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* தமிழகத்தில் நிலச்சரிவு அபாய குறைப்புக்கான திட்டம், 50 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
* கடலுார், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் வெள்ளத் தணிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை, 3.90 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும்.
மக்கள் நல்வாழ்வு துறை
* தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் இயற்றப்பட்டு, 87 ஆண்டுகளாகி விட்டன. இன்றைய சுகாதார சவால்கள், எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப, புதிய தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் இயற்றப்படும். அதன்படி, வீடு, மருத்துவமனை அல்லாத இடங்களில், சுய பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்ற புதிய பிரிவு சேர்க்கப்படும்
* உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ சுற்றுலா, ஆயுஷ் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை வழங்கும், 'தமிழ்நாடு மருத்துவ நகரம்' அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* மருத்துவ நிறுவனங்கள் சட்டம் இயற்ற, 16.06 கோடி ஒதுக்கப்படும்
* 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள், புதிதாக உருவாக்கப்படும்
முதியோர் காப்பீட்டு திட்டம்
* 70 வயதிற்கு மேற்பட்ட, 38 லட்சம் முதியோர்களுக்கு, வருமான உச்ச வரம்பின்றி, இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில், 'முதல்வரின் முதியோர் காப்பீட்டு திட்டம்' செயல்படுத்தப்படும்
* 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 14 வகையான உடல்நல பரிசோதனை செய்யப்படும்
* 1,090 மருந்தாளுனர்கள், 999 செவிலிய உதவியாளர் உட்பட 3,594 பணியிடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்படும்
* வீட்டிற்கே சென்று ரத்த மாதிரி சேகரிப்பு, பரிசோதனை சேவைகள், பொது- தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்படும்
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6, 9, பிளஸ் 1 படிக்கும் 16.5 லட்சம் வளரிளம் மாணவ, மாணவியருக்கு, ரத்த சோகை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும், 'இரும்பு கண்மணி திட்டம்' 6.37 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
இலவசமாக இன்சுலின்
* கர்ப்பிணிகளுக்கு, வீட்டில் இருந்தபடியே, 'ப்ளூ டூத்', வசதியுடன் கூடிய, ரத்த அழுத்தம் அளவிடும் கருவி வழங்கப்படும்
* மாதவிடாய் விலக்கு காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனநல பிரச்னைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, 'மாதவிடாய் விலக்கு ஆற்றுப்படுத்துதல் கொள்கை' செயல்படுத்தப்படும்
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, இலவசமாக இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்
* 5,000 டாக்டர்கள், 12,456 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி அளித்து, ஆட்டிசம் குறைபாட்டை 'ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் திட்டம்' செயல்படுத்தப்படும்
* வரும், 2030ம் ஆண்டிற்குள் தொழுநோய் இல்லாத இலக்கை அடைய, 'தொழுநோய் கண்டறிதல் இயக்கம்' செயல்படுத்தப்படும்
* பெற்றோர் இருவரையும் இழந்து, எச்.ஐ.வி., தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம், 3,000 ரூபாய்; பெற்றோர் ஒருவரை இழந்தவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர்கள் அறிவித்தனர்.