×

அதிக சத்துமாத்திரை சாப்பிட்ட சிறுமி பலி

 

உதகையில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழந்தார்.

உதகை அரசு பள்ளியில் அதிக சத்துமாத்திரைகள் உண்டு சிகிச்சையில் இருந்த 13 வயது சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் காந்தல் அரசு பள்ளியில் கடந்த திங்கட்கிழமை அதிகளவு சத்து மாத்திரைகள் சாப்பிட்டு மயக்கமடைந்த 4 சிறுமிகள்  சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. 

இந்நிலையில் 13 வயது சிறுமி மட்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சேலம் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுமிக்கு திடிரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஏனைய சிறுமிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை ஒருவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.