×

உடையை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள்... கொலை செய்து நிர்வாணமாக புதைத்த கொடூரம்

 

கோபி அருகே கெட்டி செவியூரில் கொலை செய்து  நிர்வாணமாக சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டி செவியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் மோகன்(27). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இதில் வாழை, சோளம் பயிர் செய்து உள்ளார். இவரது விவசாய நிலத்தில் காளான் இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் காளான் சேகரிப்பதற்காகவும், கால்நடைகளுக்கு தீவனங்களை சேகரிப்பதற்காகவும் வருவது வழக்கம். நேற்று காலை இதே போன்று செவியூர் அருகே உள்ள கும்மிபனையை சேர்ந்த முருகேசன் என்பவர் மோகனின் வாழை தோட்டத்திற்கு வந்துள்ளார். காளாணை தேடிக்கொண்டு இருந்த போது, வாழை தோட்டத்திற்கும் சோள பயிர் இருந்த விவசாய நிலத்திற்கும் இடையே உள்ள வரப்பில் ரத்த கறையுடன் சிறிய கத்தியும், அங்கு ரத்தம் சிந்தி இருப்பதும், அருகில் குழி தோண்டி மூடப்பட்ட அடையாளமும் இருப்பது கண்டு உடனடியாக தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து தோட்ட உரிமையாளர் இதுகுறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சிறுவலூர் போலீசார் நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன், பெருந்துறை மருத்துவ கல்லூரி சட்டம் சார்ந்த மருத்துவர் நந்தகுமார் முன்னிலையில் குழியை தோண்டினர். சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, உட்கார்ந்த நிலையில் நிர்வாணமாக பெண் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  அதைத்தொடர்ந்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து  திருப்பூரில் இருந்து மோப்பநாய் ராஜா வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அங்கு இருந்து சிறிது தூரத்தில் உள்ள விவசாய நிலத்திற்கும் பின்னர் கோபி திருப்பூர் சாலை வரை சென்றது. அதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து தடயவியல் அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு சுமார் 30 வயது இருப்பதும், தலையில் கல்லால் தாக்கியும் சிறிய கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தியும் கொலை செய்து பின்னர் புதைத்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுவலூர் போலீசார், நம்பியூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரிய வந்தால் மட்டுமே கொலையாளியை கண்டறிய முடியும் என்பதால், கொலை நடந்த நேரத்தில் அந்த பகுதியில் கிடைத்த செல்போன் சிக்னல், வாகனங்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்து, நிர்வாணமாக பெண் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடைகள் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் உடைகளை கொலையாளி எடுத்துச்சென்று விட்டார். உடைகளை வைத்து அடையாளம் தெரிந்து விடும் என கொண்டு சென்று உள்ளனர். பெண்ணின் இடது கையில் தேசிய கொடி, வண்ணத்து பூச்சி படங்கள் டேட்டு குத்தப்பட்டு உள்ளது.