×

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முன் தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி  

 

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் ராமசாமி (46), சசிகலா(40) தம்பதியினர். கட்டட தொழிலாளியான  ராமசாமி,  கடந்த 2016ம் ஆண்டு அதே பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்டி உள்ளார். இந்நிலையில் அந்த இடம் தன்னுடையது என கூறி அருகில் உள்ள தோட்ட உரிமையாளர் கடவுள் என்ற குருசாமி தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. 

வீட்டையும் நிலத்தையும் காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், மன விரக்தியடைந்த ராமசாமி தனது மனைவி சசிகலாவுடன் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அலுவலக வளாகத்தில், ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் அதிகாரிகள் நடந்து வந்து கொண்டிருந்த போது, திடீரென எதிரே சென்ற இருவரும் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியரும் அதிகாரிகளும், அவர்களை பிடித்து தடுத்து நிறுத்தினா். தொடர்ந்து இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.