×

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

 

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதே போல ஒமிக்ரான் பரவலும் மிக வேகமாக பரவி வருகிறது.  இதனால் இரவு நேர ஊரடங்கு,  ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? அதிகரித்து வரும் தொற்றை  கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்கிறார்.  

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும்,  அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது.