×

திருட வந்த வட மாநில இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்

 

கோவை ஆலாந்துறை அடுத்த சித்திரைசாவடி தோட்டத்தில் வீட்டில் திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆலந்துறை அருகே உள்ள சித்திரைச் சாவடி அணையில் அடையாளம் ஆண் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலமாக மிதந்தவரை தீயணைப்பு துறையினர், உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு ஆலந்துறை சித்திரைச் சாவடி பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மணி என்பவரது வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் அங்கு திருட முயன்றதாகவும், அப்போது மணியின் மகன் விஸ்வநாதன், மருமகன் சம்பத்குமார் ஆகியோர் அந்த இளைஞரை பிடித்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள், ஆலந்துறை போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீஸார் பிடிபட்ட நபர், குடிபோதையில் இருந்ததால் காலையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் படி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. ஆனால் காயங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வட மாநில இளைஞர் மறுநாள் காலையில் மாயமானதாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தான் சித்திரைச் சாவடியில் அணையில் சடலமாக மீட்கப்பட்டவர் என்பது விசாரனையில் தெரியவந்ததுள்ளது. மேலும் விஸ்வநாதன், சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேர் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்ததும், இதையடுத்து அவரின் உடலை சித்திரைச் சாவரி அணையில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.  மேலும் பிடிப்பட்ட 4 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.