×

8 மாதங்களில் கசந்துபோன காதல்! காதலியை தெருவில் விட்டுவிட்டு பெற்றோருடன் சென்ற காதலன்

 

8 மாதம் தம்பதிகளாக வாழ்ந்த காதல் ஜோடி, இளம் பெண்ணை நடுத்தெருவில் விட்டுவிட்டு, தாய் தந்தையோடு சரணடைந்த வாலிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (22). இவர் 11ம் வகுப்பு முடித்துவிட்டு அரிசிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே போன்று தொண்டைமானேந்தல் பகுதியை சேர்ந்தவர் வல்லரசு (20). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் வல்லரசு வைதேகிக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ எண்ணி கடந்த 7 மாதத்திற்கு முன்பு மணமேல்குடி கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்பு சொந்த ஊரை விட்டு கிளம்பிய இருவரும், மதுரையில் 4 மாத காலமும், கோத்தகிரியில் 3 மாதகாலமும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். அப்போது கோத்தகிரியில் வைத்து இருவருக்குமிடையே குடும்பச்சண்டை ஏற்பட்டுள்ளது. இதைக் காரணமாக வைத்து வல்லரசு, வைதேகியை அங்கேயே விட்டு விட்டு தனது தாய், தந்தையோடு வந்து சேர்ந்துள்ளார். 

இந்நிலையில் கோத்தகிரியில் தனியாக இருந்த வைதேகி பாதுகாப்பு கருதி அவரும் சொந்த ஊருக்கு திரும்பி தாய், தந்தையை சந்தித்துள்ளார். அதற்கு அவர்கள் வீட்டிற்குள் நுழையாதே என திட்டி அனுப்பியுள்ளனர். வேறு வழியின்றி கணவர் வீட்டிற்கு சென்று விடலாம் என்று அங்கு சென்ற வைதேகியை மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோர் தாக்கி அங்கிருந்து வெளியேற்றினர். இரண்டு வீட்டிலும் நீதி கிடைக்காத நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு சாட்சி இருந்தால் மட்டுமே புகாரை எடுத்துக் கொள்ள முடியும் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து, மனமுடைந்த இளம் பெண் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிர் போனாலும் பரவாயில்லையென்று தனது கணவரோடு சேர்த்து வைக்குமாறு கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வீட்டிலிருந்த மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவுடையார்கோவில் காவல்துறையினர் வைதேகியோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி காப்பகம் ஒன்றில் அனுமதித்தனர். மேலும் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.