×

“பாஜக 75 சீட்டுகள் கேட்டு அடம் பிடித்து வருகிறது! ஓபிஎஸ் பாஜகவை விட்டு வரமாட்டார்”- புகழேந்தி

 

படையில்லாத மன்னவனாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, மதத்தின் பெயரால் வாக்குகளை வாங்க நினைப்பவர்களை எதிர்ப்போம் என சேலத்தில் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.


 
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “யார் அடிமைகளாக இருந்தாலும் மதத்தின் பெயரால் வாக்குகளை வாங்க நினைப்பவர்களுக்கு எதிராக இருப்போம். படையில்லாத மன்னவனாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமியிடம் தொகுதிகள் கேட்க வரவில்லை,  அவர்கள் முடிவை சொல்லி ஒப்புக்கொள்ள வைக்கவே வந்துள்ளார். கேட்டு வாங்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை. வரும் தேர்தலில், பாஜக 75 சீட்டுகள் கேட்டு அடம் பிடித்து வருகிறது. அதில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்குவர். தற்போது 80 சதவிகித அதிமுகவை அழித்துவிட்டனர்.

பாமக தொண்டர்கள் தந்தைக்கு ஓட்டு போடுவதா? மகனுக்கு ஓட்டுப்போடுவதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். பாமகவை வைத்து இனி படம் காட்ட முடியாது.  தவெக உடன் இணைவது குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன். ஓபிஎஸ் பாஜகவை விட்டு வரமாட்டார்” என புகழேந்தி உறுதிப்பட கூறினார்.