25% ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது..! - டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அதிருப்தி..!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 25 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஒரே நேரத்தில் இந்த அளவிற்கான ஊழிய உயர்வு என்பது டாஸ்மாக் வரலாற்றிலே முதன்முறை எனவும் அவர் பேசி இருந்தார். அதோடு இதன் மூலமாக ஊழியர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களின் தொகுப்பூதியத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகடாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தார். இதுக்குறித்து அரசு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தன்னிச்சையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தையும், விரக்தியையும் அளிக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டு காலமாக ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிக குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. அதே நேரம் ஆவின் பாலகன்கள், நியாய விலை கடைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளமும், பஞ்சப்படியும் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
இப்படி அரசு தனது நிறுவன ஊழியர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துக்கொள்வது சரியல்ல என்பதை முந்தைய ஆட்சி காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அவ்வப்போது தொகுப்பூதியத்தில் அவ்வப்போது சில உயர்வினை அறிவித்தார்கள். இதனை பின்பற்றியே தவெக அரசும் தற்போது தொகுப்பூதியத்தை அதிகரித்துள்ளது. இது ஊழியர்களின் வாழ்க்கை செலவினங்களை எந்த வகையிலும் ஈடு செய்ய உதவாது என்பதை அரசு உணர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊதிய உயர்வும் கூட ஊழியர்களை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. அமைச்சரின் பேச்சில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே உள்ளது. அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி, சம்பளம் உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் முந்தைய ஆட்சியாளர்களை போலவே இந்த அரசும் நவீன கொத்தடிமை முறையை தொடர்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல எனவும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதோடு அரசு இந்த தொகுப்பூதிய உயர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.