" அது பச்சை பொய்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.. நீக்கப்பட்டவர்கள்தான்...!! "- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடிகால் பணிகளை முடிக்காததால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது . சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை வழங்க திருப்புகழ் கமிட்டி அமைக்கப்பட்டது. திருப்புகழ் கமிட்டி அளித்த பரிந்துரை அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட மறுப்பது நல்ல அரசாங்கத்திற்கு அழகல்ல. அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்னைகளை தீர்த்தோம் .
மழைநீர் வடிகால்களை முழுமையாக அரசு தூர்வாராததால் தண்ணீர் தேங்கியது. ரெட் அலர்ட் கொடுத்த பிறகும் மழையே இல்லை; வெயில் தான் பிரகாசமாக இருக்கிறது. ஓரளவு பெய்த மழைக்கு ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எவ்வளவு அவதாரம் எடுக்கிறார்கள். ஊடகங்களில் கூட செய்திகள் வெளியானது. 6 அமைச்சர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக.. 6 பேரும் என்னுடன் தான் இருக்கிறார்கள். கேளுங்க. 6 முக்கிய தலைவர்கள் என்னிடம் வந்து, நீக்கப்பட்டவர்களை இணைக்கச் சொன்னார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்..! வேண்டுமென்றே திட்டமிட்டு சில ஊடகங்களும், பத்திரிகைகளும் அதிமுகவின் நன்மதிப்பை கெடுப்பதற்காக விளம்பரப்படுத்துகின்றன. தயவு செய்து விட்டு விடுங்கள்; எங்கள் தரப்பு தான் அதிமுக.
அதிமுகவில் கட்சி விரோத செயல்களை ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள். அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்கள். அதிமுக இரண்டாக கிடைக்கிறது பிளவுபட்டுள்ளது என்கிற தயவு செய்து இனி பேசாதீர்கள். அதிமுகவில் உட்பகை இல்லை.. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே உட்பகை கொண்டவர்கள் . அதிமுக பிரிந்து கிடக்கவில்லை. பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான். ” என்று கூறினார்.