×

அடுத்த கட்டமாக பேருந்து கட்டணத்தை உயர்த்த திமுக அரசு திட்டம்- தங்கமணி

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில்  நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக பங்கேற்று அண்ணாவின் திருவுருவ படத்திற்கு தீபாராதனை காண்பித்து படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 18 மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் மதுரையில் திமுக அமைச்சர் தனது மகனின் திருமணத்தை 1000 ஆடுகள், 1000 கிலோ கோழி கறி என 100 கோடி ரூபாய் வரை செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளார். இதற்கு முதல்வரே தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்திருப்பது கொள்ளையடிக்க முதல்வர் முக ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளது. தமிழகத்தில் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் அரசின் மின் கட்டண உயர்வால் நலிவடைந்த தொழில்கள் மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

திமுகவின் சொத்துவரி,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வு தொடர்ந்து அடுத்த கட்டமாக பேருந்து கட்டணமும் திமுக அரசு  உயர்த்த திட்டமிட இருப்பதால் திமுகவிற்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம்,இலவச மடிக்கணினி தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிடும்” எனக் கூறினார்.