×

திருவாரூரில் பயங்கரம்..!! வீடு புகுந்து செங்கல் சூளை மேஸ்திரி வெட்டி படுகொலை..!!

 
திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் மனைவி சுதா, மகன் சுமன் மற்றும் மகள் தியாஸின் உடன் வசித்து வருகிறார். திருமுருகன் செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் திருமுருகன் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அதிகாலையில் வெளிப்பக்க கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து திருமுருகன் உள்பக்க கதவை திறந்து கொண்டு வெளியில் வருவதற்குள், வெளிப்பக்க கதவை உடைத்து கொண்டு 6 நபர்கள் மது போதையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் திருமுருகனை அந்த கும்பல் சரமாரியாக வெட்ட தொடங்கியுள்ளது. தடுக்க வந்த அவரது மனைவி சுதாவையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. தாக்குதலில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளது.
படுகாயம் அடைந்த சுதா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது தொழில் போட்டி காரணமா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.