×

தலைநகர் சென்னையில் பயங்கரம் : சீறிப்பாய்ந்த காருக்குள் இளம்பெண் அலறல் - விரட்டிப்பித்த போலீஸ்
 

 

சீறிப்பாய்ந்த சொகுசு காருக்குள் இருந்து இளம் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு  அதிகாலையிலும் சாலையில் சென்றோர் பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுக்க மின்னல் வேகத்தில் வந்த போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று இளம்பெண்ணை மீட்டுள்ளனர்.   காருக்குள் இருந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.  தலைநகரம் சென்னையில்தான் அரங்கேறியிருக்கிறது இப்படி ஒரு பயங்கர சம்பவம்.

 சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று அதிகாலை 3. 00 மணி அளவில் சீறிப் பாய்ந்த அந்த காருக்குள் இருந்து இளம்பெண் அலறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறது.  இதைப் பார்த்து பதறிய சாலையோரம் சென்றவர்கள் உடனே போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க,  அவர்கள் கார் சீறிப்பாய்ந்த சாலையை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றிருக்கிறார்கள்.   அப்போது அந்த காருக்குள் இருந்து தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறது.  

காரை  விரட்டிச் சென்ற போலீசார் இலங்கை தூதரகம் முன்பாக மடக்கிப் பிடித்து விட்டனர்.   அப்போது காருக்குள் 3 இளைஞர்களும் ஒரு இளம்பெண்ணும் இருந்திருக்கிறார்.  பின் பக்க சீட்டில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் இருந்திருக்கிறார்.  ஒரு இளைஞர் காரை ஓட்டி வந்து இருக்கிறார்.   அவருக்கு அருகில் ஒரு இளைஞர் அமர்ந்திருக்கிறார்.  

 அந்த இளம்பெண் மதுபோதையில் இருந்திருக்கிறார்.   அவரை காரை விட்டு இறங்க சொன்னதும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த இளம்பெண்.  காப்பாற்ற வந்த போலீசாரிடமே தகராறு செய்திருக்கிறார்.  மதுபோதையில் இருந்ததால் அவரை சமாதானப்படுத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.   மற்ற மூன்று இளைஞர்களையும்  விசாரணைக்காக  அழைத்துச் சென்றுள்ளனர். 

 பின் பக்க சீட்டில் இருந்த இளைஞரை மது போதையில் இருந்த அந்த இளம்பெண் செருப்பால் அடித்து கொண்டே  சத்தம் போட்டிருக்கிறார்.  இதனால்தான் சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.  காரில் இருந்த அந்த இளைஞர்கள் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.  பின்னர் ஏன் சத்தம் போட்டார்  என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண்ணுக்கு 23 வயதாகிறது என்பதும்,  நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு அந்த இளம்பெண் தங்கியிருந்ததும் தெரிய வந்திருக்கிறது.

   நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு தங்கிய அந்த இளம்பெண் மதுபோதை தெளிவதற்கு முன்பாகவே இன்று அதிகாலை 3 மணிக்கு ஓட்டலை விட்டு வெளியே வந்து இருக்கிறார்.    இதை முன்னரே தெரிந்து கொண்ட துரைப்பாக்கத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் கௌதம், தீபக், சக்தி ஆகியோர்  அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி இருக்கிறார்கள்.   ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான் என்றாலும்,    மது போதையில் இருந்ததால் வேண்டாம் என்று அவர் சொல்ல வலுக்கட்டாயமாக அவரை காரில் காரில்க்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பின் சீட்டில் இருந்தவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.  இதனால்தான் அந்த இளம்பெண் சத்தம் போட்டுக்கொண்டே சென்றிருக்கிறார்.  அவரை செருப்பாலும் அடித்திருக்கிறார்.   ஆனால் முன்பின் தெரியாத நபர் காரில் கடத்தியதுபோல் ஏன் இந்த இளம்பெண் இத்தனை அலறல் சத்தம் போட்டிருக்கிறார் என்பது தான் போலீசாருக்கு  சந்தேகமாக இருக்கிறது. 

 இளம் பெண் மது போதை தெளிந்ததும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார்.