×

"ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் விதிகள்" - அமைச்சர் அன்பில் முக்கிய தகவல்!

 

திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும்.

அதன்பின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும். சிறுபான்மையினப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும். சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் நவம்பரில்தான் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

அடுத்த ஆண்டு எப்பொழுதும்போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும்.  மழை காரணமாக பல்வேறு அரசுப் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்து ஏற்கெனவே அறிக்கை கோரப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் இதுகுறித்து ஆய்வை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் உரிய வசதிகள் மற்றும் புதிய கட்டடம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.