×

வேலியே பயிரை மேய்ந்த கதை : கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்..!!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம்வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த கலையழகன் மகன் ஜெகதீசன் (46 வயது) என்பவர், பள்ளியில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, சம்பவத்தன்று தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து விட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் ஊரில், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஜெகதீசனை துறைரீதியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டார்.