×

ஆசிரியர் தகுதித் தேர்வு- 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர உத்தரவு

 

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும், 9.30 மணிக்கு பிறகு வருவோர் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்  என ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை 6.01/2026 நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. தாள்-I க்கு 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 12,001, பெண் தேர்வர்கள் 49,385 ஆகும். இதில் 1,321 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 126 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாள்-II க்கு 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 40,535, பெண் தேர்வர்கள் 1,27,208 ஆகும். இதில் 3,151 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 601 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுகளைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர்,இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நிலையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நாளன்று தேர்வர்கள் சார்ந்த தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9.30 மணிக்குப் பிறகு மையத்திற்குள் வரும் தேர்வர்கள் தேர்வு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.