×

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசுப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவிக்கு பாலியல்  தொல்லை கொடுத்த வணிகவியல்  ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பள்ளியில்  வணிகவியல் ஆசிரியராக பணிபுரிபவர் தென்நெற்குணம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (45). இவர் அதே பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பை சார்ந்த மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனால் மாணவி பள்ளிக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வந்துள்ளார். 

இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரிக்கையில் தனக்கு வணிகவியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரை சந்தித்து சம்பவம் குறித்து கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி அருண்  பள்ளி நிர்வாகத்திடமும் குற்றம் சாட்டப்பட்ட வணிகவியல் ஆசிரியரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கோட்டகுப்பம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.