×

மானியத்தில் உரம் பெற சாதிப் பெயரை கேட்பதா? ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் கண்டனம்

 

விவசாயிகள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசு மானிய விலையில் உரங்களை வாங்கிட விவசாயிகள் சாதி குறித்த விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்று பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. 

உரம் வாங்குவதற்கு சாதி குறித்த விபரத்தை தெரிவிக்க வேண்டுமென்ற அவசியம் என்ன, எதற்காக பாஜக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எதிர்காலத்தில் சாதிய அடிப்படையில் தான் உரமானியம் வழங்க பிஜேபி திட்டமிடுகிறதா? சாதி குறித்த விபரத்தை கேட்பதன் மூலம் பாஜக அரசு விவசாயிகள் மீது மேலும் தாக்குதலை தொடுத்துள்ளது. 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், "விவசாயிகளுக்கு அடியுரமான டி.ஏ.பி. மேல் உரமான யூரியாவை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. மானிய விலையில் உரக்கடைகளில் உரங்களை விவசாயிகள் வாங்கிட ஆதார் அட்டை நகலை கொடுத்து பெற்று வருகின்றனர். கடந்த 21.02.2023 ல் மானிய விலையில் உரக்கடைகளில் உரங்களை வாங்கிட ஆதார் நகலுடன் விவசாயி தனது சாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. விவசாயிகள் உரத்தை வாங்குவதற்கு சிட்டாவையும், ஆதார் நகலையும் காண்பித்தால் போதும், சாதி குறித்த விபரத்தை ஏன் தெரிவிக்க வேண்டும்? தற்போது இந்த தகவலை உரக்கடைக்காரர்கள் உரம் வாங்க செல்லும் விவசாயிகளிடம் கூறும் போது விவசாயிகள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்து வருகிறார்கள். 


வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடுகளை இந்த ஆண்டு பட்ஜெட்டில் பாஜக ஒன்றிய அரசு வெகுவாக குறைத்துள்ளது. உரத்துக்கான மானியத்தையும் பட்ஜெட்டில் குறைத்துவிட்டனர். இந்த நிலையில் மானிய விலையில் உரங்களை வாங்கிட விவசாயிகள் சாதியை குறிப்பிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளதை  உடனடியாக ரத்து செய்திட வேண்டும். ஒன்றிய அரசின் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் அமுல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசு அறிவித்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என வலியுறுத்தியுள்ளது.