×

"மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது" - கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!!
 

 

பாஜகவினர் மனதை குளிரவைக்கும் வகையில் போலீசார் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் நிலையில் வருகிற 10ஆம் தேதி முதல் வரை செஸ் போட்டி நடைபெறுகிறது.  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று  மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட்  போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் படம் எங்கும் இடம் பெறவில்லை என பாஜகவினர் குற்றம் சாட்டியதுடன், செஸ் ஒலிம்பியாட்   விளம்பரங்களில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை பாஜகவினர் ஒட்டினர். ஆனால்  திராவிட கழகத்தினர் அதை கருப்பு மை பூசி அழித்தனர். 

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் , "சென்னை மால்லபுரத்தில் நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அவரது படம் இல்லாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் தான் பா.ஜ.க.வினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை ? பா.ஜ.க.வினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா ? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பா.ஜ.க.வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது.இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் "என்று குறிப்பிட்டுள்ளார்.