×

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம் - முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேச்சு

 

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிக மிகச் சிரமம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

பருவமழை காலத்தில் சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டினார். இதன் பின்னர் விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது:  மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள். மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் உரையாற்றுகிறேன். கொரோனாவை எதிர்கொண்டு வென்றோம், மிகப்பெரிய மழையை வென்றோம்.  மழையே, வெள்ளமோ ஏற்படும் முன், தண்ணீர் தேங்காத சூழலை ஏற்படுத்தும் என்று உறுதியேற்று, மிகப்பெரிய சாதனைகளை அரசு செய்துள்ளது. 

கடந்த மழை - இந்த மழையை ஒப்பிட்ட மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். அரசு பாராட்டு மழையில் நனைய காரணமே மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தான். அமைச்சர் நேரு அன்பு, கோபம் இரண்டையும் பயன்படுத்தி பணியை சிறப்பாக முடிப்பார்.  இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் பணியாற்றினார்கள். மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிக மிகச் சிரமம்.  தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானது.  மக்களுக்காக பணி செய்கிறோம் என்பது அவசியம். அதனால் தான் இந்த பாராட்டு விழா.  2 முறை மேயராக இருந்ததால் அந்த சிரமங்கள் என்ன என்பது எனக்குத் தெரியும். சம்பவம் நடந்த உடனே களத்திற்கு செல்வது தான் கருணாநிதியின் பாணி. 2021 பருவமழை அனுபவத்தை கொண்டு வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைநீர் பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கூறினார்.