×

ஓ.பன்னீர்செல்வத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இதனை தொடர்ந்து அவரது உடல் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் பிப்ரவரி 25ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது தாயார் பழனியம்மாள் நாச்சியார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர் பன்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.