×

"சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை" - எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாடமி விருது!

 

மிகச்சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் ஒவ்வோரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருது சாகித்ய அகாடமி தான். இந்த விருதைப் பெறுவது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் உச்சபட்ச கனவாகவே இருக்கும். 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்துகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதனுடன் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்கிற சிறுகதை தொகுப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. அம்பையின் இயற்பெயர் சி.எஸ். லட்சுமி. புனைப்பெயர் தான் அம்பை. ஆனால் இவரின் எழுத்துகள் பெரும்பாலும் அம்பை என்ற பெயரிலேயே அறியப்பட்டதால், அம்பை என்றே அவருடைய பெயர் நிலைப்பெற்றுவிட்டது. 

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் அம்பையும் ஒருவர். 1944ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறிய வயதிலிருந்தே எழுத்தாளர் அவதாரம் எடுத்துவிட்டார். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர் சிறுகதைகளாக எழுதி குவித்தார். ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த எழுத்து துறையில் ​பெண் நிலையை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகள் எழுதி புகழ்பெற்றார். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என இவர் தொடாத தலைப்பே இல்லை எனலாம்.

இவர் SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி,  கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். "தங்கராஜ் எங்கே" எனும் சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். முதல் அத்தியாயம் என்ற சிறுகதையை திரைப்படமாகவும் தயாரித்துள்ளார். காட்டில் ஒரு மான், சக்கர நாற்காலி, ஸஞ்சாரி, தண்ணியடிக்க, வற்றும் ஏரியின் மீன்கள், அந்திமாலை, வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.